Tuesday, July 5, 2022

தன்முனைக் கவிதைகள்


 தன்முனைக் கவிதைகள்

****************************************
• உனது விழியிரண்டில்
துள்ளும் கயல்கள்
இன்னமும் எனது தூண்டிலில்
சிக்காமல் தப்புகிறது
• நெற்றியில் சூட்டிய சுட்டி
என்னையே சுட்டிக் காட்டுகிறது
ஓடி ஒளிந்து கொள்ளவில்லை
உணர்வுகளால் தலை நிமிர்கிறேன்
• பொன்னகைகள் சுமந்த
முகத்தில் பளிச்சிடுகிறது
முத்துப் பற்கள் உதிர்க்கும்
உனது புன்னகை மலர்கள்
• அழகுக்கு அழகு செய்ய
துணிந்தவர்கள் யார் ?
வெட்கமுடன் தலைகுனிகிறது
ஆபரணங்கள் !
• உனது புருவ மலைகளில்
புறப்படும் ஆதவனாய் குங்குமம்
எனது வாழ்வின் விடியலில்
சங்கமிக்கிறது நாள்தோறும்
• பெண்மையின் இலக்கணத்தில்
அணிசேர்த்து அழகுபார்க்கின்றன
நன்மக்கள் பேற்றுடன்
தாய்மையின் அரவணைப்பு
..........கா.ந.கல்யாணசுந்தரம்

No comments: