மரங்களின் இடைவெளியில்
ஊஞ்சலாடும் கிளைகள்
காற்றடிக்கும் போதெல்லாம்
உரசிப்பார்த்து மகிழ்கின்றன
உதிரும் இலைகளில்
துளிர்த்தலின் முகவரிகள்
நலம் விசாரிக்கின்றன !
சூரியக் கதிர்களின்
ஊடுருவலில் உச்சம் தொட்ட
நிழல்கள்
வெளிச்ச மொழிகளுக்கு
மகுடம் சூட்டி
வனமெங்கும் ஓய்வெடுக்கும்
பறவைகளை வரவேற்கின்றன !
சலசலக்கும் சிற்றருவியில்
குளித்தபடி குருவிகளின்
குதூகலத்தில் பங்குபெறும்
மெல்லிய சாரலில்
இயற்கையின் வாசம்
தெம்மாங்கு பாடியபடி
தென்றலோடு இணைகிறது !
உயர்வு நவிற்சியில்லை
பிறிது மொழிதலில்லை
இயற்கையின்
செப்பலோசையுடன்
இன்னிசை வெண்பாவிங்கு
அடர்வனத்து மேடையிலே
அரங்கேறுகிறது !
……..கா.ந.கல்யாணசுந்தரம்
No comments:
Post a Comment