Monday, March 16, 2020

அடர்வனத்து மேடையிலே அரங்கேறுகிறது !












மரங்களின் இடைவெளியில் 
ஊஞ்சலாடும் கிளைகள் 
காற்றடிக்கும் போதெல்லாம் 
உரசிப்பார்த்து மகிழ்கின்றன 
உதிரும் இலைகளில் 
துளிர்த்தலின் முகவரிகள் 
நலம் விசாரிக்கின்றன !


சூரியக் கதிர்களின்  
ஊடுருவலில் உச்சம் தொட்ட 
நிழல்கள் 
வெளிச்ச மொழிகளுக்கு 
மகுடம் சூட்டி 
வனமெங்கும் ஓய்வெடுக்கும்
பறவைகளை வரவேற்கின்றன !


சலசலக்கும் சிற்றருவியில் 
குளித்தபடி குருவிகளின் 
குதூகலத்தில் பங்குபெறும் 
மெல்லிய சாரலில் 
இயற்கையின் வாசம் 
தெம்மாங்கு பாடியபடி 
தென்றலோடு இணைகிறது !


உயர்வு நவிற்சியில்லை  
பிறிது மொழிதலில்லை 
இயற்கையின் 
செப்பலோசையுடன்
இன்னிசை வெண்பாவிங்கு
அடர்வனத்து மேடையிலே
அரங்கேறுகிறது !


……..கா.ந.கல்யாணசுந்தரம்

No comments: